மத்திய அரசில் நல்லாட்சி இடம்பெறுகின்ற நிலையில், அதனை விட சிறந்ததொரு நல்லாட்சி கிழக்கு மாகாண சபையில் நடைபெறுவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் குறிப்பிட்டுள்ளார்.
கல்வித்துறை உட்பட எந்தவொரு விடயத்திலும் அரசியல் பழிவாங்கல் இல்லாத ஒரேயொரு மாகாண சபை நிர்வாகம் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், கிழக்கு மாகாணமே நாட்டுக்கே முன்னுதாரணமாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏறாவூர் கோட்டக் கல்விப் பிரிவிலிருந்து கல்வியியற் கல்லூரிகளுக்குத் தெரிவு செய்யப்பட்ட ஆசிரிய பயிலுநர்களை வரவேற்கும் நிகழ்வு ஏறாவூர் அறபா வித்தியாலயத்தில் இடம்பெற்ற போது பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எல்லாக் கட்சிகளும் எல்லா சமூகங்களும் இணைந்து மிகவும் வெளிப்படைத் தன்மையாக, ஒழிவு மறைவும் வேறுபாடுகள், புறக்கணிப்புக்கள் இன்றி, எல்லா இடங்களையும், இனங்களையும், மதங்களையும், சமமாக மதித்துப் பங்கீடு செய்கின்ற ஒரு நிலைப்பாட்டிலே கிழக்கு மாகாண சபை நிர்வாகம் ஒன்றித்து செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக பாரிய சவால்களுக்கு முகம்கொடுத்ததாகக் குறிப்பிட்ட முதலமைச்சர், தொடர்ந்தும் அத்தகைய சவால்களை உள்ளும் புறமும் எதிர்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
எனினும் மனம் சளைக்காமல் உறுதியுடன் இருந்து, தியாகம் செய்து, இன ஒற்றுமையைப் பலப்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சொந்த மாவட்டத்தில், சொந்த ஊரில் அதிலும் வீட்டுக்கு அருகிலுள்ள பாடசாலையில் ஆசிரியர் இடமாற்றம் கோரி நாளாந்தம் முதலமைச்சர் அலுவலகத்தை நாடி வருவோர் எண்ணிக்கை குறைந்தபாடில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



Blogger Comment