“நிறைவேற்று ஜனாதிபதி முறையை இல்லாது ஒழிப்பதை பலர் விரும்பினாலும் அவ்வாறு அது ஒழிக்கப்பட்ட பின் எதனைக் கொண்டு அதனை நாம் ஈடுசெய்வது? மீண்டும் வெஸ்ட்மின்ஸ்டர் அல்லது கலப்பு முறைக்கு செல்வதா?” என ஜனாதிபதி சட்டத்தரணி, பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் வழிப்படுத்தல் குழு உறுப்பினரான ஜயம்பதி விக்கிரமரட்ன நேற்று கேள்வி எழுப்பினார்.
இதேவேளை, புதிய அரசியலமைப்பு வரைபு இன்னமும் தயாரிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
ராஜகிரியவிலுள்ள அவரது இல்லத்தில் நேற்றுக் (10) காலை நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
புதிய அரசியலமைப்பின் இறுதி வரைபினை சமர்ப்பிப்பதற்கு காலம் குறிப்பிடப்படவில்லையென்றும் தான் முன்வைக்கும் அனைத்து கருத்துக்களும் தனது தனிப்பட்ட கருத்துக்களெனவும் இது வழிப்படுத்தல் குழுவின் கருத்துக்கள் அல்லவென்றும் அவர் தெரிவித்தார்.
“என்றாலும் தனிப்பட்ட முறையில் இது காலம் தாழ்த்தப்படுவதனை நான் விரும்பவில்லை” என சுட்டிக்காட்டிய அவர் புதிய அரசியலமைப்புக்கான வரைபு இன்னமும் தயாரிக்கப்படவில்லை என்றும் கூறினார்.
அரசியலமைப்பு சபையினால் இது பாராளுமன்றத்தில் கலந்துரையாடப்பட்டதன் பின்னரே இவ் வரைபு இறுதி வடிவம் பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
புதிய அரசியலமைப்பு தொடர்பான அறிக்கை நவம்பர் மாதம் அரசியலமைப்பு சபைக்கு சமர்ப்பிக்கப்படுமென வழிப்படுத்தல் குழு கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவிப்பு விடுத்துள்ளது.
“இதனுடன் சம்பந்தப்பட்ட ஆறு உப குழுக்களும் தமது அறிக்கைகளை வழிப்படுத்தல் குழுவிடம் ஒப்படைத்துள்ளன” என்றும் ஜெயம்பதி விக்கிரமரட்ன கூறினார்.
நிறைவேற்று ஜனாதிபதி முறை, அதிகார பரவலாக்கம் மற்றும் புதிய தேர்தல் முறை என்பன தொடர்பில் குறித்த அறிக்கை கலந்துரையாடப்படவுள்ளது.
நாட்டின் இறைமைக்கு குந்தகம் ஏற்படும் பட்சத்தில் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை மத்திய அரசாங்கம் மீள பெற வேண்டுமென்ற கருத்துடன் உடன்பட்டிருந்த அவர், “மத்திய அரசாங்கம் மாகாண சபைகள் மீது தான்தோன்றித்தனமான தீர்மானங்களை மேற்கொள்ள கூடாது என்பது உறுதி செய்யப்பட வேண்டும்” என்றும் கூறினார். 1978 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நிறைவேற்று ஜனாதிபதி முறைமையில் காலத்துக்கேற்ப பல மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டி இருப்பதனால் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு இதுவே சிறந்த தருணமாகுமென்றும் அவர் தெரிவித்தார்.
“அரசியலமைப்புகள் நீடித்து நிலைப்பதில்லை. இருந்தாலும் புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதற்கு இதுவே சரியான சந்தர்ப்பமாகும். இச் சந்தர்ப்பத்தை நாம் நழுவ விடக்கூடாது. அதனால் அனைத்து கட்சிகளும் இவ்விடயத்தில் நெகிழ்வு தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும்” என்றும் அவர் கூறினார்.

Blogger Comment