மத்திய வங்கி பிணை முறி தொடர்பில் புதிய சூழல் தோன்றியுள்ள நிலையில் இது தொடர்பில் முறையான விசாரணை நடத்த ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டுமென முன்னாள் அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இதற்கான வேண்டுகோளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் விடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மத்திய வங்கி பிணை முறிகளில் ஊழல், மோசடி இடம்பெற்றுள்ளமை தற்போது தெளிவாக வெளியிடப்பட்டு வருகின்றது. இத்தருணத்தில் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டு இது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி ஏற்பாடு செய்த விசேட செய்தியாளர் மாநாடு நேற்று (03) கொழும்பு பொரளையிலுள்ள என். எம். பெரேரா நிலையத்தில் இடம்பெற்றது.
இந்த மாநாட்டில் தொடர்ந்தும் விளக்கமளித்த முன்னாள் அமைச்சரும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருமான டியூ குணசேகர இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
பிணை முறி தொடர்பான புதிய நிலமைகளை நோக்கும் போது; அதனோடு தொடர்புபட்ட நிதி நிறுவனத்தின் உத்தியோகபூர்வ அறிக்கையின்படி, அந்த நிறுவனம் 2015 ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் 2016 மார்ச் 31 வரையான ஒரு வருட காலத்துக்குள் பெற்றுக்கொண்ட வருமானம் 5.1 பில்லியனாகும். தற்போது சகல வங்கிகளினதும் கவனம் இது தொடர்பில் திரும்பியுள்ளது. எமது பிரதான வங்கிகளின் இலாபமும் அத்தோடு அதில் உள்ளடங்குகின்றது.
மேற்படி நிறுவனம் 2013ல் 500 மில்லியன் கையிருப்போடுதான் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியையும் மேலும் சம்பாதித்துக் கொண்ட தொகையையும் சேர்த்தே மத்திய வங்கி தகவல்களை வெளியிட்டது. இதற்கிணங்க அந்த நிறுவனத்திற்கு ஒரு வருடத்தில் 400 வீதம் இலாபம் கிட்டியுள்ளது என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்

Blogger Comment