பொலிஸ் திணைக்களத்தில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதாக சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
உயர் தொழில் நுட்பத்தைக்கொண்ட பொலிஸ் சேவையின் அவசியம் உணரப்பட்டிருப்பதன் காரணமாகவே புதிய மாற்றங்கள் கொண்டுவரப்படவிருப்பதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். மத்துகம தேர்தல் தொகுதியின் வெலிப்பன்னையில் நிர்மாணிக்கப்பட்ட புதிய பொலிஸ் நிலையத்தை திறந்து வைத்துப் பேசுகையிலேயே அமைச்சர் சாகல ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்திருக்கிறார்.
அங்கு அவர் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது :-
நாட்டு மக்கள் ஒரு உயர் தொழில் நுட்பத்தைக் கொண்ட பொலிஸ் சேவையையே இன்று எதிர்பார்க்கின்றனர். தொடர்ந்தும் பழைய முறையிலேயே பொலிஸ் சேவை தொடருமானால் மக்களது எதிர்பார்ப்புகளை துரிதமாக நிறைவேற்றிக் கொடுக்க முடியாது போகும். எனவே தான் எதிர்காலத்தில் பல புதிய மாற்றங்களை கொண்டுவர அரசு தீர்மானித்திருக்கிறது.
குற்றச் செயல்களுக்காக தண்டிப்பதோ. அல்லது குற்றங்களுக்கு தீர்வை கண்டுபிடிப்பதோ முக்கியமல்ல குற்றச் செயல்களிலிருந்து மக்களை பாதுகாப்பதே மிக முக்கியமானதாகும். எத்தனை பேர் தண்டிக்கப்பட்டுள்ளனர், எத்தனை தீர்வுகள் வழங்கப்பட்டிருக்கின்றன என்பனவற்றுக்குப் பதிலாக எத்தனை குற்றச் செயல்களை தடுத்துள்ளோம், முறியடித்திருக்கின்றோம் என்பதையே பொலிஸார் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நாட்டு மக்கள் இன்று பொலிஸாரையும், அவர்களின் செயற்பாடுகளையும் கூர்மையுடன் அவதானித்தவண்ணமே உள்ளனர். இதனை புரிந்துகொண்டு பொலிஸார் நவீன முறையில் செயற்பட வேண்டும். இன்று பொலிஸாரின் செயற்பாடுகளை ஒளிப்பதிவு செய்து முகப்புத்தகத்தில் போடுகின்றனர். மேலிடங்களுக்கு அனுப்புகின்றனர். எனவே இவ்விடயத்தில் பொலிஸார் மிக அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

Blogger Comment