கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாட் பதியுதீன் மீது இரண்டு அமைச்சர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
சீனி மற்றும் எதனோல் ஆகியனவற்றை குறைந்த விலையில் விற்பனை செய்ததாக அமைச்சர் பதியுதீன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அமைச்சர்களான லக்ஸ்மன் செனவிரட்ன மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளனர்.
இறுதியாக நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது நேரடியாகவே அமைச்சர் பதியுதீன் மீது இரண்டு அமைச்சர்களும் குற்றம் சுமத்தியுள்ளனர்.
பெலவத்த மற்றும் செவனகல சீனி உற்பத்திச்சாலை தொடர்பில் எழுந்த பேச்சுக்களின் போது இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
விற்பனை விலையை விடவும் குறைந்த தொகைக்கு பெருந்தொகை சீனியையும், பெருந்தொகையை எதனோலையும் அமைச்சர் பதியுதீன் விற்பனை செய்தார் என தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்ட போது தாம் எவ்வித குற்றமும் இழைக்கவில்லை என அமைச்சர் பதியுதீன் தெரிவித்துள்ளார். ஏனைய விபரங்களை அமைச்சின் செயலாளரிடம் கேட்டு அறிந்து கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
இதன் போது அமைச்சர் பதியுதீனுக்கும், அமைச்சர்களான லக்ஸ்மன் செனவிரட்ன மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோருக்கும் இடையில் கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது,
இந்தப் பிரச்சினையை தீர்த்து வைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலையீடு செய்ய நேரிட்டுள்ளது.
குற்றச்சாட்டுக்கள் குறித்து எழுத்து மூலம் முறைப்பாடு செய்யுமாறும் இந்தக் குற்றச்சாட்டு குறித்து குழு ஒன்றை நியமித்து விசாரணை நடத்தப்படும் எனவும் ஜனாதிபதி இதன் போது கூறியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் நிதிமோசடி விசாரணைப் பிரிவினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை, உரிய முறையில் விலை மனுக் கோரி சீனி மற்றும் எதனோல் விற்பனை செய்யப்பட்டதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளர் ரீ.எம்.கே.பி. தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

Blogger Comment